Friday, March 14, 2008

காதல் கவிதை

உணர்ச்சிகள்,உணர்வுகள்,உறவுகள்
இதுதான் இவன் உலகம்.

இலக்கணம்,இலக்கியம்,பிழை
இப்படிதான் இவன் கவிதைகள்.

இயல், இசை, நாடகம்
இப்படிதான் இவன் விருப்பங்கள்.

கவிதை,கதை,பொய்
இப்படிதான் இவன் பேச்சுகள்.

பாசம்,காதல்,கோபம்
இவைதான் இவனை ஆட்சி செய்யும் அரசர்கள்.

சிரிப்பு,அழுகை,மௌனம்
இப்படிதான் இவன் தினங்கள்.

வெற்றி,தோல்வி,ஏக்கம்
இப்படிதான் இவன் முயற்சிகள்.

வலி,தழும்பு,மருந்து
இப்படிதான் இவன் தோல்விகள்.

உணர்ச்சிகளை
வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த - இவனுக்கு,
கட்டுப்படுத்த கற்றுக்கொடுத்தது
கல்லூரி வளாகம்.

தேர்வுக்கு,
விழித்திருந்து படிக்கும்
நண்பர்களுக்கு நடுவில்
படுத்திருந்து நடிக்கும்
பாதகன்.

தேர்வு முடிவுக்கு,
நடுங்கிக் கொண்டே காத்திருக்கும்
நண்பர்களுக்கு நடுவில்
தெரிந்திருந்தே நடிக்கும்
மாணவன்.

ஆரம்பத்தில்
வார்த்தைகளுக்கே வழியில்லாமல் இருந்து,
முடிவில்
அடுக்கடுக்காய் தாள்களை எழுதி
அரியருக்கு அருகில் போகாமல்,
தேர்ச்சி பெறும்
நேர்த்தி அறிந்தவன்.

காத்திரு என்று சொல்லிவிட்டு
காலம் தாழ்த்தியதால் -
காலை வாறிவிட்டவன் - என
பட்டம் பெற்றவன்.

எழுந்து வா என்று சொல்லிவிட்டு
எழுதிக்கொண்டே இருந்ததால்
ஏமாற்றியவன் - என
பட்டம் பெற்றவன்.

குடும்பத்திற்காக,
காதல் ஆசை தானே தவிர
காதல் வெறியல்ல - என
தன் மீதே நம்பிக்கையில்லாதவன் போல்
தோற்றமளித்து தோற்றவன்.

காதல் மரம் - ஒன்று - செழிக்கலாம்,
அல்லது பட்ட மரமாகலாம்.
அவ்வளவுதான்.
பட்ட மரத்தின் வேர்கள்
அடுத்த மரத்திற்கு நீர் கொடுக்குமா? என
கல்லூரியில் வேதாந்தம் பேசியவன்.

பட்ட மரத்தின் வேர் வழியே
அடுத்திருந்த ஓர்
ஆலமரத்தையே வளர்த்திருக்கிறான்.

வேதாந்தம் பேசிய - பழைய
வேதாளம்
தோள்களை விட்டு வேறு மரத்தில்
தொற்றிக் கொள்கிறது.

இவனது
கல்வி வாழ்க்கையில் மட்டுமல்ல,
காதல் வாழ்க்கையிலும் கூட
பொறுமையாய் ஆரம்பித்து
அருமையாய் வளர்கிறாள்
கல்விக் கடவுள்.

இவன் காதல்
மதில் மேல் பூனை.
இதில்
மதிலுக்கு இந்த புறம் பெற்றோர்கள்.
மதிலுக்கு அந்த புறம் திருமண வாழ்க்கை.
இதில் பூனை
இவன் காதல் ஆசை.

பூனை கண் மூடும்போதெல்லாம்
பூலோகம் இருண்டுவிட்டதாய்
பயப்படுமாம்.
அது போலதான் இவன் காதல் ஆசையும்.

இந்த பூனைக்கு
வந்தது ஒரு ஆசை.
இது ஆசைப்படுவது
இங்கிருந்து அங்கு தாவ அல்ல.
மதிலை உடைத்து
இரு புறங்களையும் ஒன்று சேர்க்க.

பூனை எடை அதிகமாக,
மதில் மேல் சமாளிக்க முடியுமா? என
மனதில் கேள்வி எழுகிறது.
மதில் தானாய் உடைந்துவிடாதா? என
ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறது.

எப்படி ஜெயிக்கபோகிறாய்? என
என்றோ ஒரு நாள் கேட்டதற்கு,
இத்தனை செய்திருக்கிறேன் அவர்களுக்கு.
இதுகூட செய்ய மாட்டார்களா எனக்கு
என கேட்கிறான்.

பத்து நல்லது செய்தால்
ஒரு தவறு இலவசம் என்று
இவனுக்கு யார் சொன்னது?
இதை
இவனிடம் யார் சொல்வது?

இழந்தவர்களுக்காக
இயன்ற வரை அழுது,
இருக்கும் இளையவளுக்காக
முடிந்த வரை முயன்று - இருவர்
மூவராகியதில் மகிழ்ந்தான்.

கல்விக் கடவுள் உணர்வுகளை
காலையும் மாலையும்
காலந்தோறும் - சுமந்து சுமந்து
மனம் பலசாலியானது.

போட்டிக்கு இவன் தயார்.
போட்டி இவன் பெற்றோர்களோடு.
ஒவ்வொரு முறை இவன்
மோதிவிட்டு
வார்த்தைக் காயங்களோடு வரும்போது
உதட்டோரப் புன்னகையில்
அவள் மருந்திட்டால்
காயங்களை மறந்துவிட்டு
மாயங்களை செய்துகாட்டி
மாலையோடு வந்துவிடுவான்.
காதல் வெறியில் வெற்றியோடு.

எதிரில் வருபவர்கள்
எலியாய் வருகிறார்களா?
எப்படி வரப்போகிறர்கள்?
அந்த பூனை போலவே
ஆவலோடு காத்திருந்தோம்
அந்த
ஆனந்த அதிர்ச்சி நாட்களுக்காக...

அந்த நாளும்
வந்தது.
ஆனந்த அதிர்ச்சியை
தந்தது.
மதில்
தானாக உடைந்தது.
மனம்
தாறுமாறாக பறந்தது.

இவனுக்குப் பிடித்த பொருளை
இவனுக்குள் வைத்திருந்த பொருளை
உரியவர்களுக்கும்
உலகுக்கும் அறிவித்து
இவனுக்குப் பிடித்தது போலவே
இவனுக்குள் வைத்திருந்தது போலவே
அரவணைக்க வேண்டி
ஆவலோடு காத்திருக்கிறான்
அவளோடு சேரும் நாளுக்காக..,

உன்னால் முடியும் தம்பி

பெரிய பிரச்சினைகளிலெல்லாம்
சிறியதாக மூக்கை நுழைத்து,
சந்தோஷமாய் வாலை ஆட்டி,
சரியான சொற்களால் சுரண்டி,
நேரச் சிரிப்பில் கீச்சிட்டு,
வலைகளில் மாட்டாமல்,
பொறிகளை பொருட்படுத்தாமல்,
மூலையை எட்டிப் பார்க்கும்,
மூளைக் குழந்தை இவன்.

குழந்தையென உனக்கு
பெயரிட்டது பொருத்தம்தான்.
வளர்ந்து கொண்டேயிருக்கிறாய்.
ஈன்றபோது கூட பெரிதுவக்காதவள்
மௌனமாய் உன் வளர்ச்சியை ரசிக்கிறாள்.

விரல்களை பிடித்து நடந்த நீ
சிலருக்கு வழிகாட்டுகிறாய்.

தாழ்வு மனப்பான்மையோ என
தாழ்த்தியவர்கள்
உன் உயரத்தை பார்க்கிறார்கள்.

வேகம் இல்லையோ என்றவர்கள்
தூரமாய் நின்று
உன் விவேகத்தை பாராட்டுகிறார்கள்.

முப்பது நாள் விடுமுறையில்
மூன்று பக்கங்களே படித்தவன்
முந்நூறு நாட்களில்
முன்னேறிவிட்டானே என
மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள்.

உன் முடிவில்லாத முயற்சியில்
உன் மூக்கையே சிறிதாய் வளைந்திருக்கிறாய்.

பணம் எண்ணுவதிலிருக்கும்
நேர்த்தியை போலவே
மனம் எண்ணுவதிலும்
தேர்ச்சியாயிருக்கிறாய்.


அதோ பாரு ஏரோப்ளேன் என்று
உன்னை தூக்கி காட்டிய தாயை
இதுதான் ஏரோப்ளேன் என்று
அவளுடனே பயணித்து
விமானத்தை போலவே
விண்ணிலே பறந்திருக்கிறாய்.

நடந்து செல்கிறவன் தானே
இவன்.
இன்று என்ன புதிதாய்
பயணத்திற்கு தயாராகிறான்?

நடை பயணிகளுக்கு
இவன் நடத்தையில் சந்தேகம்.

இரயில் நிலையத்தில்
பயணச்சீட்டோடு இருந்தாலும்
பயணிக்க நினைத்ததால்
பிடிபட்டான் ஒரு நாள்.

நட்பு என்பது
தண்டவாளங்கள் தானடா,
வலுப்பெறலாமே தவிர
ஒன்று சேர முடியாது.
தூரத்திலிருந்து பார்ப்பதற்கு
சேர்ந்திருப்பது போல் தான்
தெரியும் என்கிறான்.

காதல் என்பது
பயணம் தானடா,
பாதை என்று நீ தவறாய்
புரிந்துகொண்டிருக்கிறாய்என்று நாம் கூற
புன்னகையோடு
பயணத்திற்கு இரயிலேறுகிறான்.

தண்டவாளத்தில் காதை வைத்து,
உளவு பார்த்தால்
தூரத்தில் சேர்ந்திருக்கும்
தண்டவாளங்களின்
வண்டவாளங்களை
அதிர்வாய் உணர முடிகிறது.

இரயில் மறைந்தாலும்
எங்களுக்குள் புகை.

சத்தமும் அதிர்வும்
நித்தமும் கேட்கிறது.

நிறுத்தநிலையத்தில்
நாங்கள்
பச்சைக்கொடி காட்டும் போதெல்லாம்
சிவப்புக்கொடி காட்டி
நிறுத்த சொல்கிறான்.
அவனை அல்ல.
எங்களை.

சில நேரங்களில்
நாங்களெல்லாம்
பச்சைக்கொடியா
நிலக்கரியா என்று கூட
சந்தேகம் வந்திருக்கிறது.

சேருமிடத்திற்கு
சென்று சேரட்டும்...
சேர்ந்த இடத்தை வைத்து
தெரிந்து கொள்ளலாம்,
பயணமா? பாதையா? என்று.

சேரும் இடம்,
சேர்ந்திருக்கும் மாநிலம் என்றால்
அது பயணமே!

திரும்பி வந்தான் என்றால்
அது பாதையே!

யாருக்கு தெரியும்.
பாதை சரியில்லையென்று
பயணத்தை நிறுத்திவிட்டு
பாதியிலே கூட வந்திருக்கலாம்!!

பொறுத்திருங்கள்.......
இப்போது
பயணித்திருக்கிறான்.
இப்போதும்
பயணிக்கிறான்!!

Thursday, March 13, 2008

டைடானிக்

கையெழுத்து.
அவசரமாக எழுதினாலும்
அழகாக
அச்சடித்ததுபோல் எழுதுபவன் இவன்.
அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இவன்,
தன் தலையெழுத்தை
தாமதமாக்குவான் என்று.

பயணச்சீட்டுக்குள்ளேயே
பாடவேளைகளின்
பாடங்களை குறிப்பெடுப்பவன்.
அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இவன்,
பயணங்கள் பல செய்து
பரந்த வெளியில்
பறக்க பயமில்லாதவன் என்று.

குழு படிப்பால்
கோட்டை விட்டு
அடுத்த முயற்சியில்
அரியரை விரட்டி அடித்தவன்.
அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இவன்,
மனக்காட்டில் ஒளிந்திருக்கும்
வீரப்பனை
விரட்ட முடியாத கேப்டன் என்று.

தன் உணவை
பகிர்ந்து அளித்துவிட்டு
பசியோடு
திருவரம்பூர் திரும்புவன்.
அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இவன்,
தன் காதலை
பதுக்கி வைத்துவிட்டு
காதலை தோற்கடித்த்து
கவலைப்பட விரும்புவன் என்று.


தனக்கான வேலை
தாமதமானாலும்
நண்பனுக்காக நடு ராத்திரி வரை
பக்கங்களை வெட்டி ஒட்டி
திட்டத்தை முடித்து கொடுத்தவன்.

அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இவன்,
நண்பன் காதலுக்காக
நடு ராத்திரி வரை
திட்டங்கள் போட்டு கொடுத்தாலும்
தனக்கான வேலை
தாமதமாவது தெரியாதவன் என்று.

கடலில் ஆரம்பித்து
காதலில் மிதந்து
கடலோடு அமிழ்ந்த
கப்பல் திரைப்படத்தின்
கதாநாயகன் இவன்.

அன்று எங்களுக்கு தெரியவில்லை.
இவன்,
நிறுவனத்தில் ஆரம்பித்து
நித்தமும் அவளை நினைத்து
நிசப்தமாய் உரையாடி
நெஞ்சுக்குள்ளேயே அமிழ்த்திக்கொள்ளும்
கதை நாயகன் என்று.

கனவுக்கு கண்கள் வைத்து
கற்பனைக்கு காது வைத்து
ஆசைக்கு மீசை வைத்து
அதில்
முயற்சி எனும் மூச்சை வைத்தால்
காதல் எனும் முகம்
கண் முன்னே தெரியும்.
இவனுக்கும் தெரிந்தது.


சென்று சேர்ந்திருக்க வேண்டிய
செல்லமான அந்த மூத்த படகு
கரை சேரட்டுமே என்று
காத்திருந்தது சரிதான்.
அதற்காக
அதுவரை
கரையிலேயெ நிற்பேன் என்பது
எந்த விதத்தில் நியாயம்?

எப்படியோ
எந்த கணத்திலோ முடிவடுத்து
ஏறுகிறான் காதல் கப்பலில்.
காற்று போன போக்கில்
கப்பல் போகிறது.
கானல் போன போக்கில்
காதல் போகிறது.

எதிரே
எதிர்காலம்
பனிக்கட்டி மலையாய்
படர்ந்திருக்குமோ என்ற பயத்தில்
பாதிவழியில் திரும்பி
புறப்பட்ட இடத்தையே சேர்கிறான்.
இவன் கரைசேர வேண்டுமென்பதற்காக
ஓடுகின்ற நீரெல்லாம்
பாதை மாற்றி - இவன்
பாதையில்
பயணிக்கும் என காத்திருப்பதில் நியாயமா?

இக்கரைக்கு அக்கரை பச்சை
அக்கரைக்கு இக்கரை பச்சை என்பதால்
இந்த கரையும் வேண்டாம்
அந்த கறையும் வேண்டாம் என்றால்
பொறுமையாய் காத்திருந்து
பெற்றோர் சொல்லும்
புதிதான கரையை சேர்வாயா?
அதுமட்டும் பச்சையாய் இருக்குமா?

ஓடிவந்து கட்டிப்பிடிக்கும்
எந்த குழந்தைக்கும்
நினைவில் இருந்ததில்லை
நேற்று விரட்டி அடித்தது.
அதுபோல தான் காதலும்.
விரட்டி அடித்தால்
துரத்தி பிடிக்கும்.
விலகி ஓடினால்
தூரத்தில்தான் நிற்கும்.

உடல்நிலை சரியில்லாத
உன் நிலையை சரிசெய்வதற்கு
ரத்தம் எடுக்கத்தான் வேண்டும்.
அப்போது வலிக்கிறது என்பதற்காக
நோயுடனே இருந்திட முடியுமா?

சூழ்நிலை சரியில்லாதபோது
உன் உள்ளத்தை வலுப்படுத்த
தோல்விகள் வரத்தான் செய்யும்.
தோற்கிறாம் என்பதற்காக
முயற்சி செய்யாமலிருக்க முடியுமா?

கரையை சேர்வதற்கு
கடல் வற்றும்வரை
காத்திருந்தால் கரை சேர்வோமா?

உயர பறக்கும்
எந்த பறவையாவது
கீழே விழுவதைப் பற்றி யோசித்திருக்குமா?

மனக்கதவை உள்பக்கமாக
தாழிட்டுவிட்டு , வெளியே வ்ந்து
தானே கதவை தட்டினால்
திறக்கப்படுமா?

பழம் நழுவி பாலில் விழுந்து
அது நழுவி தேனில் விழுந்து
அது நழுவி வாயில் விழுந்தால்
அப்போது சாப்பிடுகிறேன் என்றால்
பட்டினியாய் இருக்க இவன் தயாரா?

இருளில் நன்றாக விழித்து
எதுவும் தெரியவில்லை என்பதால்
பகலில் கண்களை மூடிக்கொண்டு
எதுவும் தெரியவில்லை என்பதால்
கண் குருடாகிவிட்டது என்றால்
என்ன நியாயம்?

கரை - இவனை
கரை சேர்க்க அனுமதிக்குமா?
கரைக்கு இவன்
கரை சேர ஆசைப்படுவது தெரியுமா?

கறையாகிப்போனாலும்
கவலையில்லை,
கரை சேர முயற்சிப்பதில்லையென
முடிவெடுத்திருக்கானா?

இவனுக்கான
கரையில் வேறு கப்பல் ஒதுங்கிவிட்டதா?

அருகில் செல்லும் படகுகள்
வேகமாகவும்
விவேகமாகவும் செல்லும்போது
உனக்கு மட்டும் என்ன யோசனை?

கலங்கரை விளக்கமாய்
கரையில் இருக்கதான் முடியும் நண்பர்களால்.
கரை சேர்க்க வைக்க முடியுமா?

ஒன்று மட்டும் தெரியும்
நீ பாலைவனத்தை ரசிப்பவன் அல்ல.

கப்பலுக்கு நங்கூரம்
கடல் அலைகளிலிருந்து
காத்துக்கொள்ள.
கரையோரத்தில்
கொஞ்சநேரம் நிறுத்திக்கொள்ள.
தான் போகும் பாதையை
தடுத்துக்கொள்ள அல்ல.

இந்த கேள்விகள் ,
நாங்கள் பதில் தெரிந்துகொள்வதற்காக அல்ல.
பதில்களை நீ தேடி வைத்துக்கொள்வதற்காக.

ஹே ராம்

நண்பன் என்றால் இவன்.
நண்பா என்பவன் இவன்.

கல்லூரி படிப்பெல்லாம்
காலப்போக்கில்
கலைந்துவிடும் மேகமென்று
வாழ்க்கையை படிப்பதை
வாடிக்கையாக்கிக் கொண்டு
வகுப்பறையில்
கடைசியில் அமர்ந்து
கதைப் புத்தகங்களை
கரைத்து குடித்தவன்.

பரீட்சைக்கு முதல்நாள்
படித்ததையெல்லாம்
பட்டியலிட்டு,
படபடப்பை ஏற்படுத்தும்
பயமுறுத்தி இவன்.

செவிக்கு உணவுள்ளபோதும்
சேகரித்து வந்த மதிய உணவை
சத்தமில்லாமல்
மிச்சமில்லாமல் முடித்துவிட்டு
எடுத்து வந்தவன் முகத்துக்கு முன்
ஏப்பமிடுபவன்.

என்ன பேசுவதென்றே
புரியாமல் நாம் விழித்த காலத்தில்
எண்ணிக்கையிட்டு பேசியும்,
அந்நியமான ஆங்கிலத்தை
அளவில்லாமல் பேசியும்,
ஆச்சர்யப்படுத்தியவன்.

நல்லவனா கெட்டவனா என
நாம் கேட்ட போதெல்லாம்
நாயகனைப் போலவே தெரியாதென்று
நம்மை குழப்பியவன்.

நப்பாசைகள் எதுவுமில்லாமல்
நட்பாசைகளை
நன்றாக தின்றுவிட்டு
நெஞ்சை நிமிர்த்தி நின்றவன்.

உருவத்திற்கும் செயலுக்கும்
சம்பந்தமே இல்லாததுபோல்
உள்ளத்தையும் உள்ளிருக்கும்
உணர்வுகளையும் புரிந்து கொண்டவன்.

நண்பர்களின்
மனக்குப்பைகளின் மேலேறி
சோகத்தில் தூங்குபவர்களை
அறிவுரை தண்ணீரை
அர்த்த ராத்திரிகளில்
அடித்து ஊற்றி
விடியலை காட்டும்
வித்தியாசமான கோழி இவன்.

தன்னுடைய வாழ்க்கையை
தான் போட்ட குப்பைகளுக்குள்
தானே தொலைத்துவிட்டு,
முடிந்தவரை தேடி தேடி
முதுகு வலி வரச் செய்தவன்.

காதலா நட்பா என்று கேட்டால்
காதலுமில்லை , நட்புமில்லை
காவல் என்று மழுப்பிவிட்டு
ஷங்கரைப் போலவே
சங்கதிகளை சொல்லி ஏங்கவைத்து
குழப்பிவிட்டு குதூகலிக்கும்
குதர்க்கவாதியே!.

மறைந்து போகிற
மேகங்களுக்குள்
முகம் தேடுகிறாய்.
கிடைக்கலாம். ஆனால், நீடிக்குமா?

காலப்போக்கில் கலைந்து போகிற
கால்தடங்களுக்குள்
யுகம் தேடுகிறாய்.
இருக்கலாம். ஆனால், நிலைக்குமா?

இவளோ அல்லது
அவளோ,
அல்லது வேறு எவளோ,
அவள் வந்து
உன் மனக்குப்பைகளை குவித்து
எரிகுச்சி வைத்து எரிப்பாள்.
எஜமானி - அவள் வந்து
எரித்து முடித்தாலும்,
சமாளிக்க முடியாத உன் சுற்றங்களை
சாம்பலாக்கினாலும்,
சிறிது காலம் புகையத்தான் செய்யும்.
அடங்கிய பிறகு
அதன் மீது கட்டு உன் மனக்கோட்டையை.
அசைக்கமுடியாத அஸ்திவாரத்தோடு.
ஆனால்,
மன பரிசோதனை செய்து கொள்ள
மறக்காதே!!!!!!!!!

உன்னை அங்கும் இங்கும்
உலகமெங்கும் தேடித் தேடி
கண்டுபிடித்த அந்த நாளில்
கேட்டோம் - கண்களில் கோபத்தோடு.
எங்கே இருந்தாய் என்று?.
உன்னை நீயே தேடிக்கொண்டிருந்ததாய்
உளறுகிறாய்.
கண்களில் மன்னிப்போடு.

நீ ஒளிந்திருக்கிறாய்.
நீயாகவே ஒளிந்திருக்கிறாய்...
நீ உன்னை தேடு.
நாங்கள் உன்னை தேடுகிறோம்....
நீ உன்னை கண்டறியும்போது .
நாங்கள் உன்னை கண்டுபிடிப்போம்.
அதுவரை
எங்கள் கேள்விகளுக்கு நீ
பதில் கூற தேவையில்லை.
எங்கள் அழைப்புகளுக்கு
பதில் கூறு.
அதுபோதும்!!!

Wednesday, March 12, 2008

தாஜ்மஹால்


எங்களின்
எந்த ஒரு குடும்பத்திலும்
எவ்வித ரத்த பாசம் இல்லாவிட்டாலும்
எங்களுக்கெல்லாம்
மச்சானாகியவன்.

மச்சம் பார்த்து
மாட்டிக் கொண்டவன்.
கல்லூரி வாழ்க்கையில்
கோபியர்களோடு
கூடித்திரியும் மச்சமாகியவன்.

ஆசைகளை அடக்கி அடக்கி
காதலை பிழிந்து பிழிந்து
நட்பு மட்டுமே மிஞ்சியிருக்கும்
மிச்சமாகியவன்.

அவன் எழுதும்
கவிதைகளுக்குள்
அவன் ஒளித்திருக்கும்
அர்த்ததை போல
அவனையே தேடுகிறவன்.

வெள்ளந்தியான மனதை
வெளியில் காட்டி
பச்சோந்திகளை
தனிமையில் தன்னைதானே
பரிசோதிக்க செய்தவன்.

இவன் உலகம்,
தனித்தீவு.
எப்போதும் சிரிப்பலைகளால்
சூழப் பட்டது.
எப்போதாவது பேரலைகளால்
சூரையாடப் பட்டது.

இந்திய விநாயகர் எனும்
எங்கள் நட்பு கண்டத்திற்கு
அழகு சேர்க்க
அதனடியில் அமர்ந்திருக்கும்
இலங்கையெனும் மூஞ்சுறு இவன்.

நட்பு எனும் சிங்கள நாட்டுக்குள்
காதல் மனத்தின் இன உணர்வுக்கு
இடமில்லை என்று
அகதியாக்கப்பட்டு
அடுத்த மாநிலத்தில்
அடைக்கலம் புகுந்தவன்.

அகதியானபோது கூட
அருகேயிருக்கும்
நட்பு கண்டத்திடம்
ஆதரவு கேட்கவில்லை.
அகதியாகிவிட்டேன் என
ஆர்ப்பரிக்கவில்லை.

மன இன உணர்வை
மனதுக்குள் அடக்கிக்கொண்டு
தனக்கென ஒரு
வாழ்க்கையிருப்பதையும்
அதில், அவன் தான் ராஜா என்பதையும்
தானாகவே புரிந்துகொண்டவன்.

தான் அகதியானாலும்
நட்பு கண்டத்தில் வாழ
நண்பர்களுக்காக
உறைவிடம் தேடி
உறைந்து போனவன்.

இப்போதும் கூட
மனக்கப்பலில்
நட்புச்சரக்குகளை மட்டும் ஏற்றி
எண்ண அலைகளின் ஆட்டத்தில்
அவ்வப்போது
இன உணர்வை அறுத்துவிட்டு
சிங்கள நாட்டின்
செழிப்பை பார்க்க
சென்று வருகிறான்.

சென்று வரும்போதெல்லாம்
மனக்கப்பல்
முழுவதுமாய் ஈரமாகிறது.
கரை சேர்ந்ததும்
பெருமூச்சுத் தென்றலில்
அத்தனை ஈரமும் காய்ந்துபோகிறது.

இரண்டு கண்டத்திற்கிடையில்
இருக்கும் இந்த
நட்புச்சரக்கை விடுங்கள்.
இருக்கும் கண்டங்களுக்கெல்லாம்
இவன் மூலம்தான் சரக்கு செல்கிறது.
அதிலேயே இவன் மனம்
ஆனந்தமடைகிறது.

உனக்கென தேடிய
தீவை விடு நண்பணே,
உன்னையே உலகம் என
நினைக்க பிறந்தவள்
எங்கோ இருக்கிறாள்.
அவளை கண்டுபிடி.
அவள் காத்திருக்கிறாள்.
அவளை போலவே காத்திருக்கிறோம்......

பஞ்ச தந்திரம்


ஐம்புலன்களை
ஐந்து விரல்களுக்குள் அடக்கினால்
ஐம்பூதங்களை ஆளலாம்
என்பதில்
ஐயமில்லாதவன்.

படிக்கத்தானே வந்திருக்கிறோம்
படித்து காட்டுவோம் என்றவன்.
நண்பன் தானே நானும் என
நடுவில் தலை விடுபவன்.

துவண்டு விழும்போதெல்லாம்
தோள் தாங்கி நிற்பவன்.

மன பாறையையும் மீறி
காதல் வேர் துளிர்க்கும் என
காதலை வளர்த்தவன்.

கல்லூரி காலத்தில்
நண்பர்கள் இவனுக்கு உடை.
கடவுள் இவனுக்கு உணவு.
கல்வி இவனுக்கு உடல்.
குடும்பம் இவனுக்கு உயிர்.

மண நதியில் நீர் வருமென்று
கரையில் காத்திருந்தவனுக்கு
காலப் போக்கில்
மன வெள்ளம் வந்து
கரையை புரட்டிப் போடுகிறது.
நதியின் பாதையை
திருப்பிப் போடுகிறது.

நதியென்றால் வெள்ளம் வருமே,
அதனால்,
அரிக்கப்பட்ட கரையை குறை சொல்வதா?,
இல்லை,
நதி தானே நீ
எப்படி வெள்ளமாகலாம்
என நதியை குறை சொல்வதா?

மழைநீர் சேர்ந்ததால்தானே
வெள்ளம் வந்தது,
இதற்கு நதி என்ன செய்ய முடியும்?

அது கரைக்கு தெரிந்தாலும்,
அரித்துவிட்டு போனதால்,
கரையில் இருந்த மரங்களை
ஆட்டிவிட்டு போனதால்
கரைதான் நதியை நெருங்க முடியுமா?

நதியை விடு,
கரையை விடு,
நதிக்கும் கரைக்கும் நடுவில்
வெள்ளத்திலும் வளர்ந்த
வெள்ளை ரோஜா?

கரை
தானாக தன்னிடம்
மண் உணர்வுகளை ஒட்டிக்கொண்டு,
மறந்து
நதியை சேருமா?
இல்லை,
நதிதான்
ரோஜாவின் வேர்க்காக
கரை உரசி
மண் சேர்க்குமா?

கரையில்
மரங்களிருந்தால் போதுமென
மனம் நினைக்கிறதா?.

கரை எப்படி நகரும்,
நதியாய் வரட்டும் என
காத்திருக்கிறதா?

நீர் பாய்ந்த காலங்களெல்லாம்
நினைவிலிருக்கிறதா?
வெள்ளமும் மழையும்தான்
யோசிக்கப்படுகிறதா?

சுனாமி வந்த கடற்கரையெல்லாம்
காலம் ஆன பிறகு
அலையோடு ஆலோசிக்கும்போது
எப்போதோ வந்த வெள்ளம்
எதற்காக சிந்தனையில்?.

முதன்முறையாய்
அணை திறந்து
நதி கரை உரசுவதை பார்ப்பதற்கும்,
வெள்ளம் அடித்து முடித்தபின்
பாதிப்பை கேட்பதற்கும்,
மட்டுமே சென்ற
பார்வையாளர்களால்
பாதிப்புக்கு விலை சொல்லவும்
வார்த்தை நிவாரணமும்
மட்டுமே கொடுக்க முடியும்.

கடவுள் விட்ட சாபம்
மனிதன் தவறு செய்வது.
கடவுள் கொடுத்த வரம்
மனிதனை தவறை திருத்த செய்வது.
தவறு நடந்து விட்டது.
திருத்திக்கொள்ளலாமே?
மனிதர்கள் தானே நாமும்.

ஆண்டவனை வேண்டிக்கொள்கிறோம்.
அங்கங்கே தேங்கி இருக்கும்,
அந்த பழைய உணர்வுத் தேக்கங்களை
ஒன்று திரட்டி
நதியையும் கரையையும்
வறட்சியையும் மீறி
ஒன்று சேர்க்க
சுற்றி இருக்கும் மரங்களெல்லாம்
பொய்க்காமல் பெய்யட்டும்
மற்றும் ஒரு முயற்சி மழை.

Tuesday, March 11, 2008

குஷி

இவன்..,
பாடலை கேட்டதோடு மட்டுமில்லாமல்
பாடகியையும் ரசித்தவன்.

அர்த்த ராத்திரியில்
அமுக்கு பிசாசிடம் மாட்டிக்கொண்டவன்.

கண்ணாடி போன்ற நட்பில்
கல்லெறிந்து விட்டாயே என்றதில் கடுப்பானவன்.

உணர்ச்சி வசப்பட்டதில்
வசமாக மாட்டிக்கொண்டவன்.

சூரி சொல்லு சூரி சொல்லு என்பதற்கு
ப்பூரி என்று சொல்லி பூரித்தவன்.

தளர்ந்து போன தந்தையை
தோள் மேல் கை போட்டு அழைத்துச் செல்பவன்.

தன்னுடைய அழுகைக்கு காரணம்
தான்தான் என்று சொல்லி சிரித்துக் கொள்பவன்.

கல்லூரி வளாகத்துக்குள் காலப்போக்கில்
குடும்பமாய் வாழ்ந்தவன்.

நன்றி இல்லாத நண்பர்கள் என்று சொல்லி
நன்றிக்காக நாய் வளர்த்தவன்.

தன்னை நோக்கி எறியப்படும் வார்த்தை பந்துகளை
தடுத்து நிறுத்தி ஓட்டம் எடுப்பதில் ஆட்ட நாயகன்.

கோபத்தில் மலையேறுவதில் முருகனாகி
மன்னிப்பில் மண்டியிடுவதில் மரியாளாகியவன்.

திருமணத்தில் ஆசீர்வாதத்தை எதிர்பார்க்காமல்
ஆசீர்வாத - திருமணத்தையே மணந்துகொண்டவன்.

எங்கேயோ பரமத்தியில் பிறந்த இவனுக்கும்
எங்கேயோ பரதேசத்தில் வளர்ந்த அவளுக்கும்தான்
ஆண்டவன் எழுதி வைத்திருக்கிறான்.
இவங்கதான் கல்யாணம் பண்ணிக்க போறாங்க.
எப்படி கல்யாணம் பண்ணிக்க போறாங்க?.
வாருங்கள், திரைப்படத்திற்கு, குஷியாய்.

வகுப்பறை திரையரங்கத்துக்குள்,
வானவில் நிறங்கள்
ஒவ்வொன்றும்
ஒரு நுழைவுச்சீட்டை வாங்கி
ஓரமாய் ஒருங்கே அமர்கிறார்கள்.

கரும்பலகை திரையில்
வெள்ளெழுத்துக்களாய் ஆசிரியர்
பெயர்ப்பலகை எழுத
ஆரம்பித்தது திரைப்படம்.

நாயகன் நாயகி - திரையிலில்லை.
எங்களோடு திரைக்கு முன்னால்.

திரைப்படம் ஆரம்பித்து
சிறிது நேரம்
நாயகனும் நாயகியும் சந்திக்கவில்லை.

நாயகன் எங்களோடு சிரிக்கிறான்.
நாயகி ஏங்கலாக பார்க்கிறாள்.

சிறிது நேரத்தில்
இரட்டையாய் சிரிப்பு சத்தம்.
இருவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.
இருவரும் இணைந்து சிரிக்கிறார்கள்.

பெற்றோரின் அழைப்புக்காக
திரையங்கத்திலிருந்து
வெளியேறினான் நாயகன்.

சிறிது கால பிரிவைக்கூட தாங்காமல்
அழைப்பு அனுப்பினாள் நாயகி.

அழைப்பிலிருந்த முடிச்சை
அவனே அவிழ்த்துப்போட
ஆரம்பித்தது வில்லன் காட்சி.

திரும்பி வந்து அமர்ந்தார்கள்.
திரையை போலவே
வாழ்க்கை இருளானதால்
வெளிச்சத்தை தேடி
நிலத்திலே நிழல் விழாத கோவிலில்
கீதம் பாடினார்கள்.

ராகம் ஒன்று சேர்ந்து
பாடல் விமரிசையானது.
இவர்கள் சேர்ந்ததை
மற்றவர்கள் விமர்சிக்கலானது.
சிலருக்கு விசித்திரமாகிப்போனது.

நான்காம் பருவத்தில் நண்பர்களாகி
ஐந்தாம் பருவத்தில் ஐக்கியமாகி
ஆறாம் பருவத்தில் ஒன்றாகி
காதல் பருவத்தில் தேர்ச்சி பெற்றார்கள் .

இணைந்துவிட்டதால்
ஈருடல் ஓருயிர் ஆகிவிட்டதால்
பொதுவான இருக்கையில்
பொதுமக்களோடு அமராமல்
அனுமதியின்றி
அடுத்த வகுப்பில் அமர்ந்தார்கள்.

அவர்கள் அமைதியாயிருந்தாலும்
அருகே அமர்ந்திருந்தவர்களுக்குள் சலசலப்பு.
இப்போதுதான் இடைவேளை.
இவர்களுக்குள் அன்று முதல்
இடைவெளி இல்லாத வேளை.

இரண்டாவது பாதியில்
எதிர்பார்த்தது போல்
எடுத்ததுமே அதிர்ச்சிதான்.

நாயகன் மீது நம்பிக்கையில்லாமல்
அனுமதிச்சீட்டை பரிசோதிக்க
அனுமதி கேட்டு விட்டே வருகிறார்
உரிமையாளர்.

பரிசோதனை அறிந்து
நாயகன் நாயகியை பிரிந்து
நண்பர்களோடு அமர்கிறான்.
உரிமையாளர் சென்றவுடன்
நண்பர்களை பிரிந்து
நாயகன் நாயகியோடு அமர்கிறான்.

திரைப்படத்தில் சண்டை கூட உண்டு.
வில்லனால் அல்ல.
வில்லங்கங்களால்.
இருட்டுக்குள்.
முதல் நாள் நாயகிக்கு அடி.
இரண்டாம் நாள் நாயகனுக்கு அடி.
இப்படி இவர்களுக்குள் அடிக்கடி.

முகம் தேயுமளவுக்கு
முத்தமிட்டுக்கொள்வதிலும்
முகம் வீங்குமளவுக்கு
யுத்தமிட்டுக்கொள்வதிலும்
காதலும் மோதலும்
கலந்திருந்தன காட்சிகளில்.

உரிமையாளரின்
ஒவ்வொரு வருகையும்
அவரின் சந்தேகத்தை
ஊர்சிதபடுத்தியது
பரிசோதிக்க வ்ந்தவர்
பரிதவிக்கிறார்.
வேடிக்கையான முயற்சிகளானாலும்
வெற்றி பெறாமல் போனதால்
வெடிக்கிறார்.
வேடிக்கை பார்த்தார்கள்,
வேடிக்கையாய் பார்த்தார்கள்,
வருத்தத்துடனும் பார்த்தார்கள் பொதுமக்கள்.

இடைஞ்சல்களுக்கு மத்தியிலும்
இவர்கள்
கடற்கரைக்கும் பாறைக்கூரைக்கும்
கடந்து சென்று
காதல் கீதம் பாடினார்கள்.
கதையோடு ஒட்டாத இந்த பாடல்கள்
காத்திருந்த ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

வெற்றியை நிர்ணயிக்கும்
தேர்வுக் காட்சிகளை கூட
தவற விட்ட நாயகனை அழைத்து,
தவறென்று கூற
தான் நாயகன் என்று ஆர்ப்பரித்து
அடுத்த காட்சியில் வெற்றி பெற்று
ஆரவாரங்களை அள்ளிக் கொள்கிறான்.

இரட்டை வேடத்தில் இரு தோழிகள்.
இரட்டை வேஷத்தில் சில தோழர்கள்.
இவர்களால் திரைப்படம் சூடுபிடித்தது.

காதல் முத்திப்போக
காலம் முத்திப்போக
தடைகளை மீறி திருமணம் நடந்தது.
திருமணங்கள் நடந்தது.
ஒரு முறை கரைக்கு அருகில்.
ஒரு முறை கூரைக்கு கீழ்.
ஒரு முறை பாறைக்கு மேல்.

திருமணங்கள் முடிந்தாலும்,
திரைப்படம் முடியும் நேரத்தில்,
அவசியம் புரியாத சில தேடல்களில்
அவசர அவசரமாய் சில இறுதிக்காட்சிகள்.
தேவையில்லாத இட மாற்றங்கள்.

தேடிக்களைத்த பின்
காலாற நடக்க - தன்
கால் சுவடுகளுக்குள் மீண்டும் நடக்கிறான்,
நாயகியோடு கைகோர்த்துக்கொண்டு...
காலம் ஆனதும் - அவர்கள்
கால்தடங்களுக்குள் பிஞ்சுத் தடங்கள்,
காதல் தடங்கல்களை
கலைந்து போகச் செய்யும் வெற்றியின் சின்னமாய்.

அவர்கள் பயணம் ஆரம்பித்து விட்டது.
தூரமாய் நடந்து செல்கிறார்கள்.
திரைப்படம் தொடரும்... என்று முடிகிறது.
பெயர் போடுகிறார்கள்.
அதில் எங்கள் பெயர்களும்.
ஆச்சர்யப்படுகிறோம்.

அரங்கத்தை விட்டு வெளியேறுகிறோம்.
திரைப்படம் எப்படி? என கேட்கிறார்கள்.
திரைவிமர்சனக்குழுவினர்.
ஒரு முறை பார்க்கலாம் என்ற
ஒவ்வாத விமர்சனத்தை விட்டு
நல்லாயிருக்கு!!!
நூறு வருஷம் ஓடும் என்கிறோம்.
நடித்த நடிகர்களாய் அல்ல.
ரசித்த ரசிகர்களாய்.....

சில்லென்று ஒரு காதல்

இவன்
உரையாடல்களை
உன்னிப்பாக கவனிப்பவன்.

கூடியிருப்பவர்கள் சிரித்தால்
கூட இருந்து கூத்தடிப்பவன்.

வாடியிருப்பவர்கள் அழுதால்
பாரத்தில் பாதியை சுமப்பவன்.

தானும் அழப்போகிறோம்,
தானும் விழப்போகிறோம் என
தனக்கே தெரியாதவன்.

மனம் போன போக்கில் போன
இவன் வாழ்க்கையில்
மனம்தான் முக்கியம் என்றானது.

தொலைபேசி வலைவீசியதும்,
மலருக்குள் புகுந்த காற்று
மகரந்தத்தோடு வெளிவருவதுபோல,
இவன் காதுக்குள் புகுந்த
வார்த்தைகளெல்லாம்
மனதுக்குள் காதலாக சேர்கிறது.

எப்படி விழுந்தேன் என்பதும்
யாரிடம் விழுந்தேன் என்பதும்
மின்வலையில் அம்பலமானது.
உடைக்க வேண்டிய மலைகளெல்லாம்
ஊதித்தள்ளும் சிலந்தி வலையானது.

மனம்,
வெற்றி அடைந்ததாய் எண்ணி
வானத்தில் அடிக்கடி
உயரத்தில் பறந்தது.
பறந்தபோதெல்லாம்
உயிரை பிரிந்ததாய் வருந்தியது.

இதற்கா வருத்தப்படுகிறான்?
என்பது போல்
எல்லாவற்றுக்கும் வருத்தப்படுகிறது.
தெளிவில்லாத மனம்
துளிதுளியாய் திருத்தப்படுகிறது.
வலுவில்லாத மனம் மெதுவாய்
வலுப்படுத்தப்படுகிறது.

மன வில்லை வளைத்து,
வார்த்தை அம்புகளை
வரிசையாய் தொடுத்து,
இதய நரம்புகளை
வெகுவாய் கிழித்து,
உதிர்ந்த உணர்வுகளை
அள்ளி எடுத்து,
உணர்ச்சி மரத்தின் வேரிலூற்றி
அதை விருட்சமாக்கி,
இதுதான் என் கோவிலென்று
தினமும் தொழுகிறது.

நான் தான் ஆலமரம்,
நீ என் விழுது.
தனி மரம் ஒன்றை
தனியே எப்படி வளர்க்கலாம் என்று
ஆலமரம் ஆடுகிறது.

குலதெய்வம் என்று ஒன்றிருக்க
நிழல் தரும் மரம் கோவிலா? என்று
மௌனமாய் எதிர்க்கிறது.
உடலுக்கு நிழல்தரும்
மரமல்ல அது,
உள்ளத்துக்கு இதம்தரும்
குடை என்கிறான் பக்தன்.
சொல்வதை சொல்லிவிட்டு
சுருட்டிக்கொண்டு நடக்கிறான்.
அடுத்த வார்த்தை மழைக்காக.

சொந்தங்களுக்கு
பத்திரிக்கை அனுப்பி
கும்பாபிஷேகத்துக்கு வரச்சொல்கிறது.
கோவிலில் மாற்றமில்லை என
குலதெய்வத்திடம் சொல்லச்சொல்கிறது.

கும்பாபிஷேகம் நடக்கும்.
கும்பாபிஷேகம் நடக்க வேண்டும்.
குலதெய்வம் வரும்.
குலதெய்வம் வர வேண்டும்.
ஆசீர்வதிக்க வருமா?
வந்துவிட்டோமே என்று ஆசீர்வதிக்குமா?

தரிசிக்க வந்தவர்களுக்கெல்லாம்
தவிர்க்க முடியாத ஒரு பயம்.
மரம் எங்களுக்கு சொந்தம்,
மண் எங்களுக்கு சொந்தம் என்று
உரிமையாளர்கள்
உரக்க குரல் கொடுத்தால்?
நித்தமும்
நீரூற்றியவனுக்கு தெரியாதா?
மரம் யாருக்கு நிழல்தரும் என்று.

முடிவாகட்டும் என்று
வாழ்த்தும் வாய்ப்பிற்காக
பாத சாரிகள்
முடிவோடு காத்திருக்கிறார்கள்.
மரத்து நிழலில் தான்.
குல தெய்வ கோவிலில் அல்ல....

Monday, March 10, 2008

காலச்சுவடுகள்_3

கல்லூரிக்குள் நடந்ததெல்லாம்
மனதுக்குள் கல்வெட்டுகள்.
செதுக்கப்பட்டு சில காலமானாலும்,
சிறிது சிறிதாய்
மனதுக்குள் சிதைந்தாலும்,
சமீப கால விஷயங்களால்
சற்றே மனதில் புதைந்தாலும்,
தொலைந்து போகாத கால வெட்டுகள்.

நினைத்தவுடன்
ஆழ்கடல் மனதுக்குள்ளிருந்து
ஆரவாரமாய்
சிந்தனைக்கு வந்து
சில்லிடவைக்கும்
நீர்க்குமிழிகள்.

அன்று -
உணவை மறந்து
பேசிக்கொண்டிருக்கும்போது
பசி இருந்ததேயில்லை.
வேர்க்க விறுவிறுக்க
விளையாடினாலும்
வலி இருந்ததேயில்லை.
தேர்வுக்கு முதல்நாள் கூட
கூடிச்சிரிக்க மறந்ததேயில்லை.

நிலைத்ததில்லை எந்த சண்டையும்.
நீடித்ததில்லை எந்த நெருடல்களும்.
நீடித்தது எதுவும்
நிலைத்ததில்லை.
நீர்த்து போனது நாளாக நாளாக,..

எத்தனை விஷயங்கள்.
எத்தனை விஷமங்கள்.
எத்தனை வெற்றிகள்.
எத்தனை தோல்விகள்.
எந்த சூழ்நிலையிலும் மறக்காத
அத்தனையும் வைர நிமிடங்கள்.

வாடாத அந்த நினைவுகளுக்கு
வார்த்தை வடிவம் கொடுக்க மனதில்லை.
வேரூன்றிவிட்ட கல்லூரி நிகழ்வுகளை
விளக்க இந்த வேள்விக்கு வாய்ப்பில்லை.

ஆக, - ஆரம்பமே
அன்றைய பிரிவு நாள் தான்.

பிரிகிறோம் பிரிகிறோம் என்று
அழுதோம் அந்த நாள்.
ஓரே ஒரு நாள்.
ஆனால் நாம் பிரிந்ததுமில்லை
பிரிந்ததாய் உணர்ந்ததுமில்லை.

கல்லூரித் தேர்வின்போது,
விரும்பியபடிதான் வினாத்தாள்
வரவேண்டும் என்று
வேண்டிய நமக்கு,
வாழ்க்கை எனும்
விநோதமான வினாத்தாள்
காத்திருப்பது அன்று தெரியவில்லை.

நாளை என்பது என்றுமே
பாரதிதாசன் பல்கழைக்கழக
வினாத்தாள் தான்.
அதிகமாய் படித்தவனுக்கும்,
பழைய வினாத்தாள்களை புரட்டியவனுக்கும்,
கொஞ்சம் எளிதாக இருக்கலாம்.
ஆனாலும்,
நாளை எனும் தேர்வு
கணிக்க முடியாத ஒன்றே!

சிறிய உலகமாயிருந்த நாம்
சிறு சிறு கூட்டமாய் பிரிந்து
அவரவர்க்கென்று
அங்கங்கே ஒர் உலகத்தை கண்டறிந்தோம்.
புது உலகம்
புத்துணர்ச்சியை தந்தாலும்
புதைந்து போன நினைவுகளை
புரையோட செய்யவில்லை.

தனித்திருந்த போதெல்லாம்
மின்காந்த அலைகள்
தொலைவிலிருந்த நம்மை
அலைவரிசையாக்கியது.
மின்வலையில் அனுப்பிய
மின்அஞ்சல்கள் எல்லாம்
நீந்திகொண்டிருக்கும் நினைவுகளை
வலை போட்டு பிடித்தது.

பிச்சையெடுப்பவனுக்கு
இதயத்துடிப்பு
அவன் தட்டில் காசு விழும்
சத்தம் என்றால்,
நமக்கு இதயத்துடிப்பு
மனத்தட்டில் அவ்வப்போது விழும்
கல்லூரி நினைவுகள்தான்.
கல்லூரி நண்பனின் நினைவுகள்தான்.

ஏதாவது ஒரு கல்லூரி கும்பலை
பார்க்கும் போதெல்லாம்
நாங்கள் போடாத ஆட்டமா என்று
பெருமித்துக்கொள்ளும் மனம்.
இப்படியெல்லாம் சந்தோஷிக்கவில்லையே என்று
வருத்தப்படும் குணம்.
ஆட்டம் போடுங்கடா! போடுங்க
வெளியில் வந்தபிறகு தெரியும்
உலகம் எவ்வளவு பெரியதென்று
எகத்தாளமாய் நினைக்கும் குணம்.

நிலவு வெளிச்சத்தின் கீழ்,
தெருவிளக்கு ஒளியில்,
நண்பனின் தோள் சாய்ந்து,
நாக்கு சுட சுட,
பால் அருந்திய அந்த நாட்கள்.
இப்போதும் என்றோ ஒரு நாள் -
தெருக்கடையில் , நள்ளிரவில்
பால் அருந்த நேரும்போது
அந்த நினைவுகள் தான்
அப்போது அருந்தும் பாலைவிட
அதிகமாய் இனிக்கிறது.

நாட்களான பிறகு
நடந்த தவறுகளெல்லாம்
நகைச்சுவையாய் மாறுகிறது.
பட்ட கஷ்டங்களெல்லாம்
புரிதலுக்கென்றே தெரிகிறது.
நடக்காத நல்லவைகளெல்லாம்
நல்லதுக்கென்றே தோன்றுகிறது.
இழந்த விஷயங்களெல்லாம்
இதற்குதானோ என விடை தெரிகிறது.


கடந்து போகிற நிமிடங்களெல்லாம்
கலைந்து போன அந்த நினைவுகளை
கண்களுக்கு காட்டிச் செல்கிறது.
கடந்து போகிற மேகங்களெல்லாம்
வானம் முழுவதும் கலைந்து விட்ட
வானவில்லை வளைக்க சொல்கிறது.
உலகம் முழுவதும்
வியாபித்திருக்கும் இந்த
வானவில்லுக்குள்
வித்தியாசமான
வி விமா நிங்ள்.

விவகாரமான விஷயங்களை
விளையாட்டாக எடுத்துக்கொள்ளும்
கோபக்கார சிகப்பு.
விளையாட்டான விஷயத்தை
விவகாரமாக்கிவிடும்
விவேகமான நீலம்.
எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டியதை
எதுவும் தெரியாதது போல்
மறைக்கும் கறுப்பு.
இதையெல்லாம்
வெளியில் சொல்கிறானே என்பதுபோல்
வெளிப்படையான வெள்ளை.
எல்லோரையும் சிரிக்க வைத்துவிட்டு
எதற்காகவோ தனக்குள் அழுது கொள்ளும்
பாவமான பச்சை.
எல்லோரையும் குழப்பி விட்டுவிட்டு
தானும் எதற்காகவோ குழம்பி கொள்ளும்
மர்மமான மஞ்சள்.
காதலாகவே இருந்துவிட்டு
காதலே வேண்டாம் என்று
உளறும் ஊதா.
கல்லாகவே இருந்துவிட்டு
காதலும் கஷ்டமும் ஒன்று என்று
அணை போடும் ஆரஞ்சு.

வானத்தில் எங்களை
வானவில்லாய் பார்த்தது போதும்.
வாருங்கள்!!!
வண்ணங்களை கொஞ்சம் நெருங்கி
வருடி பார்ப்போம்.
நெருடலில்லாமல்..,

காலச்சுவடுகள்_2


பல்தொழில் படித்து முடித்த
பறவைகள் இரண்டு
ஷண்முகா கல்லூரிவானில்
பறக்க வந்தது.


நட்புப் பசிக்காக
நாளொரு இதய இரையும்
பொழுதொரு மனமுமாக
கூட்டுக்குள் கூட்டம் சேர்த்தது.
சில பறவைகள் தானாகவே
கூடி சேர்ந்தது.

நாளடைவில்
வானம்
வேடந்தாங்கல்
ஆனது.

எங்கிருந்தோ எப்படியோ
தோன்றிய நீரெல்லாம்
ஒன்றாய் சேர்ந்து
கடலுக்கு சென்றவுடன்
நீலமாகிப் போவது போல,
எங்கிருந்தோ எப்படியோ
வளர்ந்த நாமெல்லாம்
ஒன்றாய் சேர்ந்து
கல்லூரிக்கு வந்தவுடன்
ஒன்று ஒன்றாய் சேர்ந்து
நீளமாகிப் போனோம்.
கொஞ்சம் கொஞ்சமாய்
ஆழமாகிப் போனோம்.

ஒவ்வொன்றும் ஒரு மாதிரி.
ஒவ்வொன்றும் ஒரு குணம்.
ஒவ்வொன்றும் ஒரு நிறம்.
கல்லூரி வானில் தான்
இந்த வானவில்
முதன்முறையாய்
உலகுக்கு தெரிந்தது.

ஒன்றைவிட மற்றது பெரிது
என்று ஆலோசிக்க,
இணை கோடுகளல்ல
நம் நட்பு.

மையம் மட்டும்
முடிவு செய்யப்பட்டு
ஆரத்தை அவ்வப்போது
அளவில்லாமல்
வளர்த்துக்கொள்ளும் வட்டம்.
இளவட்டம்.

இந்த வட்டத்திற்குள்
சில விட்டங்கள்,
சில சிறிய வட்டங்கள்,
சில தீவுகள்,
சில உருவமில்லா உருவங்கள்.
உள் வட்டங்கள் சுருங்கினாலும்,
விட்டங்கள்
வெளி வட்டம் சுருங்காமல்
பார்த்துக்கொண்டது.

எத்தனை நினைவுகள்?
எத்தனை நிஜங்கள்?
எத்தனை கனவுகள்?
மன நூலகத்தில்
எங்கோ ஒளிந்திருக்கும்
எங்கோ ஒளித்திருக்கும்
கல்லூரி புத்தகத்தை
கொஞ்சம் தூசி தட்டி
படித்துவிட்டு போங்கள்.

எப்படி இருந்தது
அந்த நான்கு வருடங்கள்?
எங்கே இருக்கிறார்கள்
அன்று பார்த்த நூறு உருவங்கள்?
எப்படி போனது
அடுத்த ஐந்து வருடங்கள்?
அமைதியாய் யோசித்து
லேசாக மனசை வருடுங்கள்.

வேகமாய் சென்றிருக்கும்
வாழ்க்கை வாகனத்தை
சற்று ஓரமாய் நிறுத்தி
வந்த பாதையை
சற்றே திரும்பி பாருங்கள்!!!

Sunday, March 9, 2008

காலச்சுவடுகள்_1

காதலனாகியதற்கும்
கணவனாகியதற்கும்
எத்தனையோ எழுதிய நான்,
என்னை
மனிதனாக்கிய உங்களுக்கு
என்ன செய்திருக்கிறேன்? என்று
மனதில் ஒருநாள் ஒரு
கேள்வி.
அதற்கு பதிலாகத்தான்
இந்த வார்த்தை வேள்வி.

இந்த வேள்வி
புகை கிளப்புவதற்கு அல்ல.
எல்லாவற்றையும் போட்டு
பொதுவாய் எரிப்பதற்காக அல்ல.
உங்களையெல்லாம்
ஒன்று சேர்த்து வார்த்தைகளால்
ஆசீர்வதிப்பதற்காக.

சேர்ந்திருந்தது
4 வருடம் என்றால்,
சேர்ந்ததற்கு பிறகு
சேர்ந்து இல்லாமல் இருந்தது
5 வருடமாகிவிட்டது.

நிகழ்ந்ததையும்
நிகழ்வுகளையும்
நீர்வீழ்ச்சியாக்கி வார்த்தைளாய்
உங்கள் மீது விழச்செய்கிறேன்.
உன்னையே அலசிப்பார்த்துக்கொள்,
அருகே குளிப்பவனை
சிறிதாய் உரசிப்பார்த்துக்கொள்.

சிலர் முழுக்க நனையலாம்.
சிலர் மீது தண்ணீர் தெறிக்கலாம்.
சிலருக்கு சில்லிடலாம்.
சிலர் வழுக்கி விழலாம்.
துவட்டிக்கொண்டு
துவங்குங்கள் நாளைய பயணத்தை.
குளித்த புத்துணர்ச்சியோடு.
ஆ-ரம்பம்.